Tuesday, January 6, 2026

கரூர் நெரிசல் சம்பவம்: ஜன.,12ல் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்

கரூர் நெரிசல் சம்பவம்: ஜன.,12ல் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்

 


சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் வழக்கில், தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.


கடந்த செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தன், டி.எஸ்.பி., செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரை, டில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.



அதேபோல, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரிடமும் தனித்தனியாக ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அப்போது, கரூர் சம்பவத்தில், 41பேர் உயிரிழந்தற்கான காரணங்கள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தவெக நிர்வாகிகள் குற்றம் சுமத்தி இருந்தனர்.



இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, தவெக தலைவர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. வரும் ஜனவரி 12ம் தேதி விஜய் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் சம்மனில் குறிப்பிட்டு உள்ளனர்.

Saturday, January 3, 2026

வெனிசுலா அதிபர் மதுரோ நாடு கடத்தப்பட்டார்: டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலா அதிபர் மதுரோ நாடு கடத்தப்பட்டார்: டிரம்ப் அறிவிப்பு

 


கராகஸ்: வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்நாட்டு அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் நாடு கடத்தப்பட்டு விட்டதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.



நீண்ட கால பகை

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வெனிசுலா ஆட்சியாளர்கள் மீது, அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.




இந்நிலையில், சில மாதம் முன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெனிசுலா கப்பல்களும் தாக்குதலுக்கு ஆளாகின. வெனிசுலா போதை கடத்தல் மையமாக இருப்பதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை அந்த நாடு திட்டவட்டமாக மறுத்தது.



தாக்குதல்

இந்த சூழலில் இன்று திடீரென வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் குண்டு வீசி தாக்குதலை தொடங்கின. ராணுவ தளங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.

Friday, December 5, 2025

துபாய்-ஹைதராபாத் எமிரேட்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்

துபாய்-ஹைதராபாத் எமிரேட்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்



ஹைதராபாத்: துபாய்-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.


துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு EK 526 என்ற எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு ஒரு இ மெயில் வந்தது.

மிரட்டலை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு குழுவினர் உடனடியாக செயலில் இறங்கினர். ஹைதராபாத் விமான நிலையத்தில் மிகவும் பாதுகாப்புடன் விமானம் இறக்கப்பட்டது. அதன் பின்னர், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கினர்.

அனைத்து பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் தனிமைப்படுத்தினர். தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

நேற்றைய தினம், மதீனா-ஹைதராபாத் விமானத்துக்கு இருமுறை இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக, அந்த விமானத்தை அதிகாரிகள் குழுவினர், ஆமதாபாத்திற்கு திருப்பி விட்டனர். 

Thursday, December 4, 2025

ரூ.50 ஆயிரம் லஞ்சம்: காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம்: காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கைது

 


காரியாபட்டி : ஒப்பந்த பணிக்கான தொகையை கொடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கணேசன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


மதுரை செல்லூரைச் சேர்ந்த முதல் நிலை ஒப்பந்ததாரர் பழனிக்குமார் 42. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்தார். இதற்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 160 தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்க கேட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார். ஆனால் மீதித் தொகையை கொடுக்காமல் காலதாமதம் செய்தனர். மீதத்தொகையை விடுவிக்க ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என இளநிலை பொறியாளர் கணேசன் கேட்டார்.

இதனை கொடுக்க மனமில்லாத பழனிக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரின் அறிவுரைப்படி பணம் தர ஒப்புக்கொண்டார். இதையடுத்து இன்று(டிச.,04) காலை 10 மணிக்கு, அலுவலகத்தில் இருந்த கணேசனிடம் முன் பணமாக ரூ. 50 ஆயித்தை கொடுத்தார். மறைந்திருந்து ஏ.டி.எஸ்.பி .,ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஜாஸ்மின் மும்தாஜ் , பூமிநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கணேசனை கைது செய்தனர். பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tuesday, December 2, 2025

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

 


சென்னை: கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. பின்னர், சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது. தவெக தரப்பு சுப்ரீம்கோர்ட்டினை அணுகி, சிபிஐ விசாரணை நடத்த கோரியிருந்தது. பின்னர் சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.



தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கரூர் கொடுந்துயரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும்.



அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் நடத்தும் வகையில் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Wednesday, November 26, 2025

பார்லியில் ஓங்கி ஒலித்த தமிழ்க்குரல்: அரசியலமைப்பு தின விழாவில் சிபிஆர் நெகிழ்ச்சி உரை

பார்லியில் ஓங்கி ஒலித்த தமிழ்க்குரல்: அரசியலமைப்பு தின விழாவில் சிபிஆர் நெகிழ்ச்சி உரை

 


புதுடில்லி: பார்லியில் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன், தன் உரையை தமிழில் தொடங்கினார்.


பார்லிமென்டில் இன்று அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது. துணை ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக பார்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபிஆர்., தமிழில் பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது: தாயின் அன்பாய், தந்தையின் அறிவாய், குருவின் ஒளியாய், தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய், நாம் அனு தினமும் வழிபடுகிற, இன்றைய புனித பாரத அன்னையின் பொற்பாதங்களை முதற்கண் பணிந்து வணங்குவோம், என்று கூறி தன் உரையை தொடங்கினார்.



தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசியதாவது: சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு அதிகளவில் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. நமது அரசியலமைப்பு சட்டம், பாரதம் ஒன்று என்பதையும், அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது.



சமூக நீதி, பின்தங்கிய வகுப்பினருக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான நமது உறுதிப்பாட்டை அரசியலமைப்பு சட்டம் பிரதிபலிக்கிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகளவில் மாறிவரும் சூழ்நிலையில், நீதித்துறை, நிதி போன்ற பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday, October 18, 2025

15 முக்கிய நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம்; அக்டோபர் 28 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

15 முக்கிய நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம்; அக்டோபர் 28 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



 புது தில்லி: தீபாவளி மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, பல்வேறு ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நிலையங்கள் உட்பட நாட்டின் 15 முக்கிய நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.


அக்டோபர் 28 வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளுக்கான கட்டுப்பாடு தொடரும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையில், உதவி தேவைப்படும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் பெண் பயணிகளுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.


பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட நிலையங்கள்:


புது தில்லி ரயில் நிலையம்


டெல்லி ரயில் நிலையம்


ஹஸ்ரத் நிஜாமுதீன்


ஆனந்த் விஹார் முனையம்


காஜியாபாத்


பாந்த்ரா முனையம்


வாபி


சூரத்


உத்னா


சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையம் (CSMT)


தாதர்


லோக்மான்ய திலக் முனையம் (LTT)


தானே


கல்யாண்


பன்வேல்